♥சில பெண்கள் ஏன் தடம் மாறுகிறார்கள் ?

♥ஒரு ஆண், பெண்ணை தேடி அலைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதற்கு முதல் காரணம், "ஆம்பளைங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க...' என்ற வரட்டு சமூக அங்கீகாரம். 

♥ஆனால், அயல் நாட்டினரும் வியந்து போற்றும் பண்பாடு கொண்ட தமிழக பெண்களுள் சிலர்  தடம் புரள காரணம் என்ன? உடல் இச்சை என்றோ, பணத்தாசை என்றோ சாக்கு சொன்னாலும், அது வழிமாறும் அத்தனை பெண்களுக்கும் பொருந்தாது. அதையும் தாண்டி, தங்கள் வாழ்வில் பெண்கள் எதிர் கொள்ளும் சில பிரச்னைகள், ஏக்கங்களே அவர்களை தடம்புரள செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சில உதாரணங்கள் இதோ உங்கள் பார்வைக்கு... 

♥பக்கத்து வீட்டிற்கு புதிதாக வந்த அந்த இளம் வயது பெண், "என் கணவருக்கும், எனக்கும் சரியான புரிதலில்லை. நாங்கள் பேச ஆரம்பித்தாலே, பெரும்பாலும் சண்டையில் தான் போய் முடிகிறது. எந்த விஷயத்திலும் அவர் என்னோடு ஒத்து போவது இல்லை. அன்பாக பேசத் தெரியாத ஒரு சிடுமூஞ்சிக்கு, என்னை திருமணம் செய்து வைத்து விட்டனர்' என்று, தன் பெற்றோரை நொந்து கொண்டார். 

♥அடுத்த சில நாட்களில், 30 வயது மதிக்கத்தக்க வாசகி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ஒரு குழந்தைக்கு தாய் என்று கூறிய அந்த வாசகி, "மேடம், என் கணவர் என்னை கண்டு கொள்வதே இல்லை. எப்போதும் பிசினஸ்... பிசினஸ்... என, பணத்தின் பின்னாலேயே சென்று கொண்டிருக்கிறார். என்னிடம் அன்பாக பேசவோ, குழந்தையை கவனித்து கொள்ளவோ அவர் நேரம் ஒதுக்குவதே இல்லை. இப்படிப்பட்டவர்கள் எதற்கு திருமணம் செய்து கொள்கின்றனர்?' என, தன் திருமண வாழ்வில் தொலைத்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

♥தோழியின் உறவினர் பெண் ஒருவர், "நீ அழகாக இல்லை; மேலும் குண்டாகவும் இருக்கிறாய்' என, என் கணவர் அடிக்கடி கூறி என் மனதை காயப்படுத்துகிறார். நான் எவ்வளவு அன்பாக இருந்தும் அவர், என்னை ஒரு மனுஷியாக கூட பார்ப்பதில்லை. பெண் பார்க்க வந்த போதே பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தால், இன்று எனக்கு இந்த நிலை வந்திருக்காது' என்று கண்ணீர் விட்டு அழுதார். 

♥சிடுமூஞ்சி கணவர், பணத்தை தேடி ஓடும் கணவர், அழகை தேடும் கணவர் என, இங்கு கணவர்கள் வேறுபட்டாலும், அந்த மூன்று பெண்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் மூவருமே கூறியது, "... ஆனால், நான் சந்தித்த "அந்த' நபர்.... என்னிடம் அன்பாக பேசுகிறார்... என் மனதை புரிந்து கொள்கிறார்... என்னை மதிக்கிறார்...' என்பது தான்.

♥இங்கே தான் சில பெண்கள் தடம் மாற ஆரம்பிக்கிறார்கள்.. தன் வீட்டில் கிடைக்காத அன்பு மரியாதை புரிந்துகொள்ளல்.. ஆறுதல்  எல்லாம் வேறு ஒருவரிடம் கிடைக்கும்போது .. இவற்றிக்காக ஏங்கிய அவளின் உள்ளம் உடனே கொள்ளை போய்விடுகிறது... 

♥ஆண்களே உங்கள் மனைவியை அன்பாக புரிந்துணர்வுடன் நடத்துங்கள்... எல்லா தவறையும் அவள் மேல் போடாதீர்கள்...